ஆளுநருக்கு எதிராக போராட்டம்.. விசிக தலைவர் திருமாவளவன் கைது..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 9-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசுகையில், தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் பல்வேறு பகுதிகளை தவிர்த்து விட்டுப் பேசினார். மேலும், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே அவர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநரின் நடவடிக்கை எதிர்த்து, அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென இன்று சென்னை, சின்னமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் முத்தரசன், சி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் கோபண்ணா மற்றும் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இவர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஏற்கனவே அனுமதி கேட்டிருந்தனர். அது மறுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 3 மணிநேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அவர்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியை தொடர்ந்தனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை தடுத்தி நிறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். மாலை வரை தனியார் மண்டபத்தில் வைத்துவிட்டு அதன்பிறகு விடுவிக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.