மும்பை அம்பர்நாத்தில் இருந்து சொகுசு பஸ்ஸில் 45 பேர் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற பஸ் நாசிக்-ஷீரடி சாலையில் பதாரே என்ற கிராமத்துக்கு அருகில் சென்ற போது இன்று அதிகாலை எதிரில் வந்த லாரி ஒன்றுடன் மோதிக்கொண்டது. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.
இறந்தவர்களில் 7 பேர் பெண்கள் ஆவர். விபத்தில் 17 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சின்னார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டார். காயம் அடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் ஷிண்டே உத்தரவிட்டார். காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. எனவே இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என வேதனை தெரிவிக்கிறார்கள்.

சின்னார் மற்றும் ஷீரடி இடையிலான சாலையில் அதிக அளவில் விபத்துக்கள் நடந்து வருகிறது. கடந்த மாதம் கூட விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர். இந்த விபத்துக்களை கட்டுப்படுத்த சாலையை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்தால் விபத்துக்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாசிக்கிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஷீரடிக்கு வந்து செல்கிறது. எனவே இச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு தினமும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.