“மூடபழக்கங்களுக்கு எதிரான முரசொலியாக கலைகளை மாற்றியது திராவிட இயக்கம்தான்” என்று, சென்னை சஙகமம் – நம்ம ஊர் திருவிழாவை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேலும் நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது, “திராவிட இயக்கம்தான் சமுதாயத்தில் ஒரு தரப்பினருக்கான சாமர வீச்சாக இல்லை. சாதிகளின் பெயரால், சமயங்களின் பெயரால் சமத்துவத்திற்கு சமாதி கட்ட நினைத்த போக்கிற்கு எதிரான சம்மட்டியாய் மூடபழக்கங்களுக்கு எதிரான முரசொலியாய் கலைகளை மாற்றியது.
* திராவிட இயக்கம்தான் கலை வடிவங்கள் மூலமாக சாமான்ய மக்கள் அவர்கள் வாழ்க்கையில் அனுபவித்த வலிகளை பேசியது.
* திராவிட இயக்கம்தான் சாமான்ய மக்களின் மொழியில் பேசியது.
* திராவிட இயக்கம் கலைகளை வளர்த்தது, கலைகளால் வளர்ந்தது.
நாடகம், திரைப்படங்கள், கிராமியக் கலைகள் வழிகளில் மக்களிடையே பரப்புரை செய்தோம். கலைகளின் வளர்ச்சிக்கும், கலைஞர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கும் கண்ணுங்கருத்துமாய் கணக்கற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திமுக அரசு.
இது கலைஞர் வழிநடக்கக்கூடிய அரசு, அதனால்தான் இது கலைஞர்களுக்கான அரசாக விளங்கிக்கொண்டிருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக வாய்ப்புகள் இன்றி இருந்த கலைஞர்களுக்கு வான் மழையாய் ஏராளமான வாய்ப்புகளும், நலத்திட்டங்களும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மக்கள் கூடும் இடங்களில் கலை சங்கமம் என்ற பெயரில் 120 கலை நிகழ்ச்சிகளை நடத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது” என்று முதல்வர் பேசினார்.