புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷி மத் நகரம் வெறும் 12 நாட்களில் 5.4 செ.மீ. புதைந்திருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் உள்ளது ஜோஷிமத்நகரம். பத்ரிநாத் போன்ற பிரபலபுனிதத் தலங்களின் நுழைவாயிலாக இந்நகரம் உள்ளது. இந்தநகரம் மெல்ல மெல்ல மண்ணில்புதைந்து வருவதால் அங்குள்ளவீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள்மற்றும் சாலைகளில் விரிசல்ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளன.
இந்நிலையில் ஜோஷிமத் நகரை கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோள் மூலம் இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையம் புகைப்படம் எடுத்துள்ளது. இதில் ஜோஷித் நகரம் டிசம்பர் 27 முதல் ஜனவரி 8 வரையிலான 12 நாட்களில் வேகமாக புதைந்துள்ளது தெரியவருகிறது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜோஷிமத்தில் கடந்த 2022 ஏப்ரல் மற்றும் நவம்பருக்கு இடையில் நிலம் வீழ்ச்சி மெதுவாக இருந்தது. அப்போது ஜோஷிமத் 8.9 செ.மீ. அளவுக்கு புதைந்தது. ஆனால் 2022, டிசம்பர் 27 மற்றும் 2023 ஜனவரி 8-க்கு இடையில் நிலம் வீழ்ச்சியின் தீவிரம் அதிகரித்தது. இந்த 12 நாட்களில் நகரம் 5.4 செ.மீ. புதைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
ஜோஷிமத்தில் ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தவிர, 678 வீடுகள் ஆபத்தில் இருப்பதாக உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது.
அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை, பருவநிலை மாற்றம், மலைப் பகுதியில் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதே நிலச் சரிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று முன்தினம் ஜோஷிமத் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். உள்ளூர் மக்கள் மற்றும் நிபுணர்களுடன் அவர் கலந்து ஆலோசித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிகமாக ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
ஜோஷிமத் பேரிடர் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.