கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை: எம்பி பதவியில் இருந்து முகமது பைசல் தகுதி நீக்கம்!

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ள லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

லட்சத்தீவு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருப்பவர் முகமது பைசல். இவர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போது, அரசியல் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் பி.எம்.சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை, முகமது பைசல் வேறு சிலருடன் சேர்த்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கவரட்டி மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் உள்ளிட்ட 4 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து அண்மையில் உத்தரவிட்டது.

இது குறித்து கருத்து கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல், “இந்த வழக்குஅரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் விரைவில் முறையீடு செய்யப்படும் என்றும்” தெரிவித்தார்.

இந்த நிலையில் கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ள முகமது பைசல், லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 8 உடன் படிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் 102 (எல்) (இ) விதிகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக நாடாளுமன்ற மக்களவை செயலகம் தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.