
இரானின் முன்னாள் துணை பாதுகாப்பு அமைச்சரான அலிரேசா அக்பரிக்கு (Alireza Akbari) இங்கிலாந்துக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இரானிய நீதித்துறையின்படி 2004-லிருந்து பிரிட்டிஷ் உளவுத்துறையுடன் பணியாற்றி வந்ததால் அவர் தூக்கிலிடப்பட்டார்.

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பேரணிகளை நடத்தி வருகின்றனர். தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குலைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஜனாதிபதியின் ஆணையை நிராகரிக்கக் கோரி இந்த பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான ஜப்பான் உடனான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தன என்று அந்த நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

கிரீஸ் நாட்டின் பொதுத் தேர்தல் 2023-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் நடத்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கூறியிருக்கிறார்.

பிரேசிலில் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கின் விசாரணையில், முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை சேர்க்க பிரேசில் உச்ச நீதிமன்றம் முடிவெடுத்திருக்கிறது.

இந்திய-அமெரிக்க Phd மாணவரான ஹர்ஷ் படேல் அமெரிக்க மெம்பிரேன் டெக்னாலஜி அசோசியேஷன் (AMTA) மற்றும் US Bureau of Reclamation-ன் மாற்று நீர் விநியோகத்திற்கான சிகிச்சை ஆராய்ச்சிக்காக ஸ்காலர்ஷிப் பெற்றிருக்கிறார்.

சீனாவில் கடந்த 35 நாள்களில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு 60,000 பேர் இறந்திருப்பதாக அந்நாட்டின் தேசிய சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

உக்ரைனில் குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 27 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் அமெரிக்காவின் 28 வயதான R’Bonney Gabriel வெற்றி பெற்றார்.