ஜோஷிமத் விவகாரம்: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு!

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் ஆங்காங்கே நிலவெடிப்புகள் ஏற்பட்டு, சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் 600 கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. மேலும், ஜோஷிமத் நகரில் உள்ள ஒரு கோயில் இடிந்து விழுந்துள்ளது. ஜோஷிமத் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள கர்ணபிரயாக் நகரிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் விரிசல் விழுந்த தங்களது வீடுகளை காலிசெய்துவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். ஜோஷிமத் நகரில் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 60 குடும்பங்கள் பாதுகாப்பற்றச் சூழல் காரணமாக அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக மறுவாழ்வு மற்றும் நீண்டகாலத் தீர்வுகளை அளிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஜோஷிமத் நகர மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதேசமயம், ஜோஷிமத் விவகாரத்தை இயற்கை பேரிடராக அறிவிக்க கோரி உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

முன்னதாக, ஜோஷிமத் நிலம் சரிவு குறித்து விரைவான ஆய்வு நடத்த ஒரு நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. குடியிருப்புகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்பு மற்றும் நதிநீர் அமைப்புகளில் நிலம் மூழ்குவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்து வருகின்றனர். ஐ.ஐ.டி., இஸ்ரோஅமைப்புகளுடன் இணைந்து இக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான பல்வேறு ஆய்வு கூட்டங்களையும், ஆலோசனைக் கூட்டங்களையும் மத்திய அரசு நடத்தியுள்ளது.

இதனிடையே, கேதார்நாத் போன்று ஜோஷிமத் நகரமும் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படும் என உத்தரகாண்ட் பேரிடர் மேலாண்மை செயலாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.