கொடைக்கானல் வட்டக்கானலில் இஸ்ரேல் நாட்டவருக்கு தொடர்ந்து பாதுகாப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் வட்டக்கானலில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்வர். இவர்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் இவர்கள் இங்கு வருகை தரும் குளிர் காலங்களில் வட்டக்கானல் பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். அதன்படி இந்த ஆண்டும் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகள் வட்டக்கானல் பகுதிக்கு அதிகளவில் வந்துள்ளனர்.  

இதனால் இப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்காக இப்பகுதியில் நுழையும் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் வட்டக்கானல் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் உள்ள போலீசார் சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் வரை இஸ்ரேல் நாட்டவர்கள் வட்டக்கானலில் தங்கியிருந்து, அதன் பின்பு தான் நாடு திரும்புவார்கள். அதுவரை பாதுகாப்பு தொடரும் என போலீசார் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.