தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தன்மை குறைந்து உள்ளது: முக கவசம் அணிவது நல்லது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தன்மை குறைந்து உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் பரவமால் தடுக்க கோவை, திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் 100 சதவீதம் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். மற்ற வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ரேண்டம் முறையில் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தன்மை குறைந்து தான் உள்ளது. முக கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது. தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. முக கவசம் அணிவது நல்லது. கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து உள்ளதா? என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி முழுமையாக முடிந்த பிறகே அது பற்றி கூற முடியும். அது ஒருபுறம் இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பை வெகுவாக தடுக்க முடியும்.

தினமும் நடைபயிற்சி, ஓட்ட பயிற்சியில் ஈடுபட வேண்டும். ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து காதலர்கள், நண்பர்களுக்கு பரிசளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரிலக்கத்தில் மட்டுமே உள்ளது. நேற்று 4000 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.