விமான கதவை திறந்த விவகாரம்.. சிக்கிய தேஜஸ்வி.. அண்ணாமலை கப்சிப்..!

திருச்சி சென்ற விமானத்தில் அவசர கால கதவை திறந்து பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாஜக எம்பி தேஜஸ்வியை விசாரணைக்குட்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பாஜக மாநில செயற்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ விமானத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்பி, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் சில மாநில நிர்வாகிகள் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விமானம் கிளம்ப தயாராகி ஓடு தளத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவசர கதவு திறக்கப்பட்டு விமானிகளுக்கு எச்சரிக்கை ஒலி அடித்துள்ளது.

இதனால் பதறிப்போன விமானிகள் உடனே விமானத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று விசாரித்தபோது, தேஜஸ்வி சூர்யாதான் எமெர்ஜென்சி கதவை திறந்ததாகவும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் உடந்தை என தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜி அப்போதே ட்வீட் போட்டிருந்தார். செந்தில்பாலாஜி போட்ட ட்வீட்டில்,

கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள். விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இன்று இண்டிகோ நிறுவனம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், அவசர கால கதவை தவறுதலாகத் திறந்தார். அதன் பிறகு உடனடியாக தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்” என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாஜக எம்பி தேஜஸ்வியை விசாரணைக்குட்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவத்துக்கு காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில், பறக்கத் தயாரான பயணிகள் விமானத்தை பெரும் ஆபத்தில் தள்ளிய காரியத்தை சாதாரண குடிமகன் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 வருடம் வரை சிறை சட்டப்படி தண்டனை உண்டு.

கர்நாடக வளர்ப்பு மகன் சென்னை திருச்சி விமானத்தில் சென்ற 100 பயணிகள் உயிரையும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார். மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டார் என்பது எப்படிச் சரி? சட்டப்படி 1 மன்னிப்பு கடிதத்தை வாங்க நிறுவனத்திற்கு உரிமை இல்லை. நிகழ்வு அடிப்படையில் புகார் கொடுத்து உரிய நபரை மாநில காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வளர்ப்பு மகன் விளையாட்டு வேடிக்கை பார்ப்பது வாரிசு அரசியலின் அலங்கோல முகம்” என இவ்வாறு அவர் சாடியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.