உலகம் முழுவதும் கடந்த 11 ஆம் தேதி அஜித்குமார் நடித்த ‘துணிவு’ படம் வெளியானது. இதனை ரசிகர்கள் ஆட்டம், பட்டம், கொண்டாட்டம் என்று மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடினார்கள்.
அதில், கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகினி தியேட்டரில் படம் பார்க்க சென்ற பரத்குமார் என்ற ரசிகர் லாரியில் ஏறி நடனம் ஆடிவிட்டு கீழே குதித்தபோது முதுகுதண்டு உடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பயங்கர அஜித் ரசிகரான இவர் கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். அவருடைய தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவரது தாயாரும் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டு சமீபத்தில் சென்னை திரும்பிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமாருக்கு அஜித் ரசிகர் உயிரிழந்த தகவலை அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.
இதையறிந்த சரத்குமார் உடனடியாக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பரத்குமார் வீட்டுக்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.
இது தொடர்பாக பரத்குமார் குடும்பத்தினர் தெரிவித்ததாவது, ”நடிகர் சரத்குமார் ரூ.75 ஆயிரம் நிதி உதவி வழங்கி எங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் பரத்குமார் சகோதரரின் மூன்று ஆண்டு கல்வி செலவை ஏற்பதாகவும், இந்தத் தகவலை இந்த தொகுதியின் அமைச்சரான உதயநிதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார்” என்று அவர்கள் தெரிவித்தார்கள்.