
நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவருடைய தாயார் சரோஜினி அம்மாள் (எ) பாப்பா (87). மதுரை விரகனூரில் வசித்து வந்த இவர், உடல்நலக் குறைவால் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.
இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் (எ) பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். ‘வைகைப் புயல்’ நடிகர் வடிவேலு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.