கசிந்த தகவல்… ஈபிஎஸ், ஓபிஎஸ்… ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு யாருக்கு?

இன்னும் ஒருமாத காலத்திற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரம் தான் தலைப்பு செய்தி. அதுவும் ஒரே கட்சிக்குள் இரு அணிகளாக பிரிந்து போட்டி போட்டு கொண்டு வேட்பாளரை நிறுத்துவது வரலாறு பார்க்காத நிகழ்வு என்கின்றனர். எல்லாம் அதிமுக விவகாரம் தான்.
எடப்பாடி பழனிசாமி
தரப்பு வேட்பாளரை நிறுத்த தயாராகி விட்ட நிலையில் நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வமும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

சிக்கலில் இரட்டை இலை

அதிமுகவின் சின்னம் இரட்டை இலை. அதை இருவரின் யாருக்கு கொடுப்பர் என்பது மில்லியன் டாலர் கேள்வி. இப்படி ஒரு சிக்கலை தேர்தல் ஆணையம் எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்விக்கு சின்னம் முடக்கப்படும் என்பது தான் பலரின் பதிலாக உள்ளது. இதனால் இருவருக்கு தனி சின்னம் ஒதுக்கப்படும். அது சுயேட்சை வேட்பாளருக்கு சமமான நிகழ்வு.

நேரில் சென்று ஆதரவு

இத்தகைய பரபரப்பான சூழலில் பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ஏனெனில் இருவருமே பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்திற்கு நேரில் சென்று ஆதரவு கேட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை டெல்லியில் நெருக்கம் காட்டி வருபவர். அதிமுக ஒருங்கிணைப்பில் கூட மோடியின் பேச்சை கேட்டு செயல்படுவர்.

குஜராத் பயணம்

இதை அவரே வெளிப்படையாக அறிவித்துள்ளார். அடுத்தகட்டமாக அதிமுகவை கைப்பற்றும் விவகாரத்தில் டெல்லியின் தயவை தான் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். சமீபத்தில் கூட குஜராத் பயணம் மேற்கொண்டது மிகுந்த கவனம் பெற்றது. மறுபுறம் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பக்கம் தான் அதிமுகவின் பெரும்பான்மை நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் இருப்பதாக சுட்டி காட்டி வருகிறார்.

அவசர முடிவு

எனவே பாஜக யாருக்கு சாதகமாக முடிவெடுக்கும். யாருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் என்ற கேள்வி எழுகிறது. இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம் என்று டெல்லி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், இதுகுறித்து இன்னும் யோசிப்போம்.

பாஜக முடிவு

இன்னும் காலம் இருக்கிறது. வெற்றி பெறுவதற்கு அத்தனை அஸ்திரங்களையும் கொடுக்க வேண்டியது இந்த கூட்டணியின் கடமை என்று மழுப்பலாக பதிலளித்தார். பாஜக போட்டியிடுகிறதா, இல்லையா? என்பதற்கும் பதிலளிக்கவில்லை. அதிமுகவில் யாருக்கு ஆதரவு என்பதற்கு பதில் கூறவில்லை. டெல்லியை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டாம் என்றே கூறியுள்ளதாம்.

அப்படியெனில் அதிமுக விஷயத்தில் ஒரு நிலைப்பாட்டை பாஜக எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த குழப்பத்திற்கு தீர்வு காணும் போது உண்மையான அதிமுக யார் என்பதும் வெளிப்படும் என அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.