ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து விதமான அலுவலகங்கள், கடைகளில் தமிழக அரசின் 1982ம் ஆண்டு அரசாணை படி தூய தமிழில் பெயர் பலகை எழுத வேண்டும் என்ற அரசாணையை அமல் படுத்த நடவடிக்கை எடுக்க தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டு இருந்தது.
ஆனால், பல மாதங்கள் கடந்த நிலையிலும், தூய தமிழில் பெயர் பலகை எழுத வேண்டும் என்ற அரசாணையை அமல் படுத்தவில்லை. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறை படுத்தாத தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், அரசு அலுவலகங்களில் தொடர்புடைய அலுவலகங்களின் பெயர் பலகை தமிழக அரசின் அரசாணை படி உரிய முறையில் கடைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழக அரசின் அரசாணை படி தமிழ், ஆங்கிலம் மொழிகளில் வைக்கப்படுவதில்லை எனவும், தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் உண்மையாகவும், கடுமையாகவும் பாடுபட வேண்டும் என்றும், சட்டக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பாட புத்தகங்கள் தமிழில் வழங்க வேண்டும் என்பதோடு, சட்டக் கல்லூரிகளில் வழக்கு தொடர்பான குறிப்பு எடுக்கப்படும் சட்ட புத்தகங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும் என்றனர்.
மேலும், தற்போது, திராவிட மாடல் என கூறப்படுகிறது. அந்த திராவிட மாடலில், மாடல் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ் சொல் என்ன?, ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள். முற்றிலும் தமிழிலே பயன்படுத்தலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசாணையின்படி தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பெயர் வைக்காமல், ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பு வைத்து உள்ள நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விரிவான தொழிலாளர் நலத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ம் தேதி ஒத்தி வைத்தனர்.
மேலும், மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலுள்ள விமான நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் தமிழில் வைக்கவும், மேலும் பாதுகாப்பு பிரிவில் ஈடுபடும் பாதுகாப்பு படையினர் (CISF, CRPF) அடிப்படை தமிழ் தெரிந்திருக்கும் வகையில் பணி அமர்த்த கோரிய வழக்கில், வழக்கு குறித்து கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் தென் தமிழகத்தில் மதுரை திருச்சி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் விமான நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பிரிவில் (CISF, CRPF) இருக்கும் நபர்கள் பெரும்பாலானார் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள், இதனால் அவர்கள் அப்பகுதி மொழிகள் தெரியாமல் இருந்து வருகின்றனர்.