நடிகர் சித்தார்த் விவகாரம் | தமிழக விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க கோரி வழக்கு

மதுரை: தென் தமிழக விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிக்கு தமிழ் தெரிந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்களை நியமிக்கக் கோரிய வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தென் தமிழகத்தில் திருச்சி, மதுரை, தூத்துக்குடியில் விமான நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிக்கு வெளி மாநிலங்களை சேர்ந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உள்ளூர் மொழி தெரிவதில்லை.

மேலும் விமான நிலையங்களில் வைக்கப்படும் அறிவிப்பு பலகைகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருப்பதால் விமான பயணிகள் பாதுகாப்பு படையினரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. அதுபோன்ற நிலைகளில் பயணிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் மதுரை விமான நிலையத்தில் இந்தி மட்டுமே பேச தெரிந்த பாதுகாப்பு படையினருக்கும் இடையே 30 நிமிடங்களுக்கு மேல் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபோன்ற பிரச்சினையை திமுக எம்பி கனிமொழியும் பிரச்சினையை சந்தித்துள்ளார்.

இதனால் திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பு பலகைகள் வைக்கவும், தமிழ் தெரிந்த பாதுகாப்பு படையினரை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.