நுவரெலியா ரதல்ல என்ற இடத்தில் சமீபத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகக்கூடிய இழப்பீட்டை வழங்குவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம் பெறாத வகையில் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதுடன் இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் தேர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்ட அமைச்சர், விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்த தரப்பினர் தம்மிடம் தெரிவித்ததாக கூறினார்.