வேங்கைவயல் தீண்டாமை விவகாரம்: "நான் முதல்வராக இருந்திருந்தால் இதை செய்திருப்பேன்”- சீமான்

“வேங்கைவயல் விவகாரத்தில் பிறகட்சிகளை குற்றம் சொல்ல, விசிக தலைவர் திருமாவளவனுக்கு தகுதியில்லை” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து முழுமையாக அறிய, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் சென்றார். அங்கு அப்பகுதியை பார்வையிட்ட அவர், மக்களை சந்தித்து நடந்த விபரங்களை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில்…
image
“புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் ஆதாயத்திற்காக, பிற சமூக மக்களின் ஓட்டு வங்கி அரசியலுக்காக திட்டமிட்டே தமிழ்நாடு அரசு குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
சம்பவம் நடந்து 30 நாட்கள் ஆகியும் இதுவரையில் காவல்துறையும் சிபிசிஐடியும் ஏன் குற்றவாளிகளை கைது செய்யவில்லை? இந்த விவகாரத்தில் பிறகட்சிகளை குற்றம் சொல்ல, விசிக தலைவர் திருமாவளவனுக்கு தார்மீக அடிப்படையில் தகுதியில்லை. அவர் கூட்டணியில் இருக்கும் கட்சி முதல்வரிடம் ஏன் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவில்லை? அல்லது நான் முன்னெடுத்த இது போன்ற பல பிரச்னைகளுக்கு எங்களுடன் அவர் களத்தில் நின்றாரா?
image
இந்த தமிழகத்தை பெரியார் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி இந்த அரசுக்கு இல்லை. சமூக நீதி என்ற வார்த்தை செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. வேங்கைவயல் கிராம மக்களை பொறுத்த வரையில் பொது குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும் என்பது தான் அவர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
நான் முதல்வராக இருந்திருந்தால் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்து சிறையில் அடைத்திருப்பேன். இது பெரியார் மண், சமூக நீதிக்கான மாநிலம் என்று கட்டமைத்திருப்பது எல்லாம் இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வேலை” என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.