பட்ஜெட் 2023: 'அல்வா' கொடுத்தார் நிதியமைச்சர்.. மிடில் கிளாஸ் மக்களுக்கு ஜாக்பாட்?

2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நிதி அமைச்சக அதிகாரிகள் பாரம்பரிய ”அல்வா” கிண்டி வழங்கும் விழாவை இன்று நடத்தினர். அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டினார். இதில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அல்வா ஏன்?

மத்திய பட்ஜெட் தயாரிப்பு செயல்முறையின் இறுதி கட்டத்தை குறிக்கும் அம்சமாக அல்வா கிண்டப்படுவது மரபு. ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நிகழ்வாக நிதியமைச்சர் கடாயில் அல்வாவைக் கிண்டி விழாவைத் தொடங்குகிறார், பின்னர் அதை அமைச்சகத்தின் தலைமையகத்தில் சக ஊழியர்களுக்கு பரிமாறுவார். வரவு-செலவுத் திட்டச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் பல ஊழியர்களை அங்கீகரித்து ‘அல்வா’ கிண்டி அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பட்ஜெட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ரகசியம் காக்கும் வகையில் ‘அல்வா’ விழாவுக்குப் பிறகு ‘லாக்-இன்’ செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள், நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக் பகுதியில் தான் நாட்டின் பட்ஜெட் அறிக்கையை தயாரிப்பார்கள். இதற்கு பத்து நாட்களுக்கு முன்பே அவர்கள் இங்குதான் தங்கவேண்டும். பட்ஜெட் ரகசியம் காக்கும்பொருட்டு அவர்கள் வீடுகளுக்கு செல்லவும் அனுமதி இல்லை.

இதன் பிறகு, பட்ஜெட் ஆவணங்களின் தொகுப்பு டிஜிட்டல் வடிவத்தில் தயார் செய்யப்படும். மத்திய பட்ஜெட் ஆவணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக காகிதமற்ற வடிவத்தில் தயார் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் டிஜிட்டல் முறையில்தான் பட்ஜெட் ஆவணங்கள் தயாரிக்கப்படும்.

கடைசி பட்ஜெட்

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மத்திய பாஜக அரசு கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இதனால் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் யுக்தி புயல் பலமாக வீச வாய்ப்புள்ளது. குறிப்பாக, முழு பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன் அளிக்கும் திட்டங்களை நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் குறிப்பிட்ட படிநிலைகள் குறித்து பல்வேறு அரசுத் துறைகள் அனுப்பிய முன்மொழிவுகளை நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும், இது நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினருக்கு பயனளிக்கும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 1, 2023 அன்று பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் பட்ஜெட் உரையை முடித்த பிறகு, பட்ஜெட் ஆவணங்கள் “யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில்” Android மற்றும் Apple OS இயங்குதளங்களில் கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.