புதுச்சேரி பல்கலைகழகத்தில், பிரதமர் மோடி குறித்த தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை தடையை மீறி மாணவர்கள் பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்று வெளியிட்டு உள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்திய மாணவர் சங்கம் உள்பட பல்வேறு மாணவர் அமைப்புகள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று திரையிட இருந்தது. இதுபற்றி அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக வளாகத்தில் ஆவணப்படத்தை திரையிடக்கூடாது என அறிவித்தது.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் மாலை 3 மணி முதல் மின்சாரம் மற்றும் வைபை ஆகியவை துண்டிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் புதுச்சேரி பல்லைக்கழகத்தில் நேற்று மாலையில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
அதைத்தொடர்ந்து, விடுதி அறைகளில் ஆவணப்படத்தை திரையிட மாணவர் அமைப்பு அறிவித்தது. அதன்படி மாணவர் அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் தங்களின் செல்போன், மடிக்கணினி வழியாக மோடியின் பிபிசி ஆவணப்படத்தை பார்வையிட்டனர்.