சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி (61) என்ற பெண் சாலையில் சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த நபர் ஒருவர் அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றார்.
இதனையடுத்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார் திருமங்கலம் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
அதில் இருந்து செயின் பறித்த நபர் யார் என்று கண்டறிந்தனர். இதனையடுத்து புரசைவாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் போலீஸார் திடீரென நுழைந்து 58 வயது நபர் ஒருவரை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அந்த நபர், புரசைவாக்கத்தைச் சேர்ந்த முகமது இலியாஸ். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தனது மகனின் ஜாமீன் மனுவிற்காக செயின் பறித்ததை ஒப்புக் கொண்டார்.
குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட குமார் என்ற நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மகன் முகமது ஃபியாஸ் (25) கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மகனின் ஜாமீன் விண்ணப்பத்திற்காக பணம் திரட்ட வேண்டியிருந்ததால் திருடியதாக இலியாஸ் போலீசாரிடம் தெரிவித்ததார். வாக்குமூலத்தின் அடிப்படையில் முகமது இலியாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
newstm.in