மத்திய பட்ஜெட்டில் இந்த 7 புதிய அறிவிப்புகள் இருக்கலாம்! சாமானியர்களின் எதிர்பார்ப்புகள்!

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, பிப்ரவரி 1ஆம் தேதி சமர்ப்பிக்க உள்ளார். மேலும் தற்போதைய பிரதமர் மோடி அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக, அடித்தட்டு மக்கள், தொழில்துறையினர், ஊதியம் பெறுவோர் எனப் பலரும் இந்த பட்ஜெட்டை எதிர்பார்த்து உள்ளனர். முந்தைய பட்ஜெட்களைப் போலவே, 2023-24ஆம் ஆண்டுக்குரிய மத்திய பட்ஜெட்டும் காகிதமற்ற வடிவத்தில் வழங்கப்பட இருக்கிறது.
அந்த வகையில் தகவல் தொழில் நுட்பம், விவசாயம், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, உற்பத்தி, மக்கள் நலத் திட்டங்கள், வரிவிலக்கு உள்ளிட்ட துறைகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
image

நடுத்தர வர்க்கத்தினருக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்க, உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கியமான தொழில்களில் வேலைகளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வேளாண் உற்பத்தியை அதிகரித்து, அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் அத்துறையில் சிறப்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80சி விலக்குகளில் இருந்து ஒரு தனி விதிக்கு மாற்ற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.
சிறு குறு மற்றும் சுயதொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் எளிதாக கடன் உதவி கிடைக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் இ-காமர்ஸ் தொடர்பான வழிமுறைகளை எளிதாக்க, வரிகளைக் குறைக்கும் எனத் தெரிகிறது.
வருமானவரிச் சட்டத்தின்கீழ் அடிப்படை விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது, வருமானவரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சமாக வரையறுக்கப்பட்டு உள்ளது.
சுகாதார காப்பீட்டிற்கான பிரிவு 80D விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. அதுபோல், வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி செலுத்துவதற்கான வரி விலக்குகளிலும் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் வகையில், பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.

image
முன்னதாக, 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு நடைமுறையின் இறுதிக்கட்டத்தைக் குறிக்கும் அல்வா தயாரிக்கும் விழா, இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர்கள் பங்கஜ் செளத்ரி, பகவத் கிசன்ராவ் காரட் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.