இரண்டே நாளில் 200 கோடி வசூலித்த 'பதான்'

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்து இரண்டு தினங்களுக்கு முன்பு ஜனவரி 25ல் வெளியான ஹிந்திப் படம் 'பதான்'. இந்தப் படம் முதல் நாள் வசூலாக 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மட்டும் சுமார் 69 கோடி வசூல், வெளிநாடுகளில் 37 கோடி வசூல் என முதல் நாள் வசூலாக 106 கோடி வரை வசூலித்துள்ளது என்கிறார்கள். ஹிந்தியில் ஒரு படம் வெளியான முதல் நாளில் 100 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. 2023ல் முதல் நாளில் 100 கோடி வசூலைக் கடந்த முதல் படம் இது. இந்த சாதனையை இதற்கு முன்பு ஐந்து படங்கள் கடந்துள்ளன.

ஆர்ஆர்ஆர் (220 கோடி), பாகுபலி 2 (210 கோடி), கேஜிஎப் 2 (155) கோடி, சாஹோ (130 கோடி), 2.0 (102) கோடி என முதல் நாளில் வசூலித்துள்ளன.

நேற்று இரண்டாவது நாள் வசூலாக இந்தியாவில் மட்டும் இந்தப் படம் 80 கோடியும், வெளிநாடுகளில் 20 கோடிக்கும் மேலும் வசூலித்து இரண்டாவது நாளிலும் 100 கோடி வசூலித்திருக்கலாம் என்பது தகவல். நேற்று விடுமுறை தினம் என்பதால் முதல் நாளை விடவும் வசூல் அதிகமாக இருந்ததாம்.

ஷாரூக்கான் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் 9 படங்கள் இதற்கு முன்பு 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. அவற்றில் 400 கோடி வசூலைக் கடந்து 'சென்னை எக்ஸ்பிரஸ்' படம் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'பதான்' முறியடிக்கும் என்கிறார்கள். அது இந்த வார இறுதிக்குள் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

குறிப்பு – வசூல் தகவல்கள் அதிகாரப்பூர்வத் தகவல்கள் அல்ல.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.