காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரில் நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம் கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தற்போது காஷ்மீரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் அனந்த் நாக்கில், ராகுல்காந்தி இன்று இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பயணம் தொடங்கிய 500 மீட்டரிலேயே ரத்து செய்யப்பட்டது. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடை பயணத்தை மீண்டும் தொடங்கப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது. இந்தியா ஏற்கனவே இரண்டு பிரதமர்கள், பல தலைவர்களை இழந்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் ராகுலின் ஒற்றுமை பயணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.