ஜார்க்கண்டில், மருத்துவமனையில் அமைந்த குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி டாக்டர், அவருடைய மனைவி உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் ஹஜ்ரா நினைவு மருத்துவமனை உள்ளது. இதில், குடியிருப்பு வளாகம் ஒன்றும் அமைந்துள்ளது. அதில், டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் புகை வீடு முழுவதும் பரவியுள்ளது.
இந்த சம்பவத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வீட்டில் வசித்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்களில் டாக்டர் விகாஸ் ஹஜ்ரா, அவரது மனைவி டாக்டர் பிரேமா ஹஜ்ரா, வீட்டு வேலையாளான தாரா, அவர்களின் உறவினர் ஒருவர் மற்றும் வேறொரு நபர் என 5 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் சிக்கிய மற்றொரு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்து அதிகாலை 1 மணியளவில் நடந்து உள்ளது. இதில், 5 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 2 நாய்களை தீயணைப்பு துறை மீட்டுள்ளது. கிளினிக்கில் இருந்த 25 நோயாளிகள் உடனடியாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், அவர்கள் பாதுகாக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.