இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்…!

தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து மோதின. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 17.1 ஓவரில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, 69 ரன்கள் எடுத்தால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற முனைப்புடன் இந்தியா தொடக்க வீராங்கனைகள் களமிறங்கினர். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் ஷிபாலி வர்மா 15 ரன்னிலும், ஸ்வேதா 5 ரன்னிலும் வெளியேறினர். அடுத்துவந்த சவுமியா திவாரி , திரிஷா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

திரிஷா 24 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 69 ரன்னை எடுத்தது. சவுமியா திவாரி 24 ரன்னுடனும், ஹிரிஷிதா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இதன் மூலம், இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.