தூத்துக்குடி: ஜாமீனில் வெளியே வந்தவர் வெட்டிக் கொலை! – பழிக்குப் பழியாக நடந்ததா?

தூத்துக்குடி, கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் கருப்பு என்ற கருப்பசாமி. லாரி டிரைவரான இவர், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கு தொடர்பாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்திருந்தார். நேற்று இரவு தன்னுடைய மாமியார் வீடு இருக்கும் தெற்கு சங்கரப்பேரிக்கு தன்னுடைய மனைவியைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அப்போது இவரை 8 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்திருக்கிறது.

கொலைசெய்யப்பட்ட கருப்பசாமி

மாமியாரின் வீட்டின் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை விரட்டியிருக்கிறது. பதறிய அவர், தன்னுடைய மாமியார் வீட்டுக்குள் சென்று கதவை உட்புறமாக தாழிட்டிருக்கிறார். அந்த கும்பல் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்து, கருப்பசாமியை சரமாரியாக வெட்டியிருக்கிறது.

கருப்பசாமியின் அலறல் சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்தவர்கள் விரைந்து வர, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறது. சிப்காட் காவல் நிலைய போலீஸார் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து, அந்த மர்மக் கும்பலைத் தேடி வருகின்றனர். கொலைசெய்யப்பட்ட கருப்பசாமி மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கடந்த 2017-ம் ஆண்டு சங்கரப்பேரியைச் சேர்ந்த அன்புசாமி என்பவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட கருப்பசாமியின் உடல்

அந்த வழக்கில் கருப்பசாமி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். அந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதால் பழிக்குப் பழியாக கொலை நடந்திருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.