வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஜன.31-ம்தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, பிப்.1-ம் தேதி இலங்கை கடற்பகுதியை சென்றடையக்கூடும்

இதனால், ஜன.29-ம் தேதி (இன்று) வடதமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜன.30, 31-ம் தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்.1-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஜன. 29-ம் தேதி (இன்று) தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் மணிக்கு 40-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.