ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்ேதரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தை தேரோட்ட திருவிழா 11 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தை தேரோட்ட விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் நம்பெருமாள் தினம்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.8ம் நாளான நேற்று நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு உள் திருவீதியாகிய நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரங்கவிலாச மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு ரங்கா விலாச மண்டபத்திலிருந்து  தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு ரங்கா, ரங்கா கோபுரம் அருகே வையாளி கண்டருளினார். அதன்பின் இரவு 8.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையை சேர்ந்தார்.

முக்கிய நிகழ்ச்சியான தை தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டார். இதைதொடர்ந்து ரங்கா, ரங்கா கோபுரம் அருகே உள்ள தைத்தேர் மண்டபத்துக்கு 4.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.  காலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை ரதாரோஹணம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தை தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். தைத்தேர் நான்கு உத்திர வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.