பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது உறுதி: மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக கிண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மகளிர் மற்றும் பாதுகாப்புக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

3-வது ஆண்டாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 150 விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேட்கள் அடுத்த சில ஆண்டுகளில் கட்டப்பட உள்ளது.

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும். அதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையம் அமைக்க எழுந்திருக்கும் எதிர்ப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாநில அரசு தான் தீர்வு காண வேண்டும். எங்கள் பணி விமான நிலையம் அமைப்பது மட்டுமே. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அனைத்தும் மாநில அரசு தான் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.