சென்னை அருகே கந்தன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் முத்தர். இவர், கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் கொட்டிவாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.45 லட்சம் டெபாசிட் செய்திருந்தார்.
அப்போது, வங்கியில் உதவி மேலாளராக இருந்த அப்சனா என்ற பெண், முத்தரிடம் இருந்து ரூ.45 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதை கொடுத்தார். அதன் பின்னர், எந்த தகவலாக இருந்தாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி எண்ணை கொடுத்து அனுப்பியுள்ளார்.
அதன் படி, முதியவர் கடந்த சில மாதங்களாக வங்கி உதவி மேலாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால், முதியவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து முதியவர், வங்கிக்கு நேரில் சென்று அங்கு மேலாளர் முரளி என்பவரிடம் வங்கி உதவி மேலாளர் குறித்து விவரம் கேட்டபோது, உதவி மேலாளர் அப்சனா, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றதாக தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், முதியவர் முத்தர் வங்கி கணக்கில் செலுத்துவதற்காக கொடுத்த ரூ.45 லட்சம் பணத்தை டெபாசிட் செய்யாமல் அப்சனா தனது வங்கி கணக்கில் செலுத்தியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, முதியவர் முத்தர் சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணமோசடி செய்து தலைமறைவான வங்கி முன்னாள் பெண் உதவி மேலாளரை தேடி வருகின்றனர்.