வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் அரசு நிதியுதவி

சென்னை: வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அய்யப்பன் என்பவர் நாளை (5.2.2023) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக, இன்று (4.2.2023) காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகில் டோக்கன் விநியோகித்தார்.

அதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியதால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி (1) வள்ளியம்மாள் (வயது 60) க/பெ. சண்முகம், (2) ராஜாத்தி (வயது62) க/பெ. ஜெமினி, (3) நாகம்மாள் (வயது 60) க/பெ. சின்னத்தம்பி மற்றும் (4) மல்லிகா (வயது 70), க/பெ. மணி ஆகிய வயதான நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பெண்கள் காயமுற்று, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான அய்யப்பன் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வயதான நான்கு பெண்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா இரண்டு இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.