ஈரோடு இடைத்தேர்தலுக்காக கருங்கல்பாளையத்தில் வீடு, வீடாக சென்று திண்ணை பிரச்சாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
இந்த ஆட்சி குறித்தான மதிப்பீடுகளில் மக்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியின் திட்டங்களும் முதல்வரின் பணிகளும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏறத்தாழ ரூ.400 கோடி மதிப்பில் ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாநகராட்சியில் எந்த பகுதிக்கு சென்றாலும் மழை நீர் வடிகால் பணி, பாதாள சாக்கடை விரிவாக்க பணி என ஏராளமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனால் சாலைகள் கூட சில இடங்களில் சேதம் அடைந்திருக்கின்றன. பாதாள சாக்கடையும், புதிய மழைநீர் வடிகால் பணியும் முடிவுற்றால் மீண்டும் அந்த சாலைகள் புதுப்பித்து தரப்படும்.
அந்த பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அந்த பணிகளும் செய்யப்படும். ஈரோடு மாநகராட்சி ஒரு மிகச்சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்த முதல்வர் ரூ.400 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆண் வாரிசு இருந்தாலும் ஆதரவற்றவர்களாக இருந்தாலும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், நிறுத்தப்பட்டவர்களுக்கு அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் சுப்பிரமணியனை வரவேற்க பெண்கள் ஆரத்தி மற்றும் திருஷ் தேங்காயுடன் வீடுகளில் நின்று இருந்தனர். அப்போது அமைச்சர் சுப்பிரமணியனிடம் இருந்து ஆரத்தியை வாங்கி வாக்காளர்களுக்கே ஆரத்தி எடுத்தார். மேலும் அவர்களது தலையை தேங்காயால் சுற்றி உடைத்தார்.