தமிழ் சினிமாவில் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான “தீர்க்க சுமங்கலி” என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பிரபல பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வாணி ஜெயராம்.
இவர் தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி என்று பல்வேறு மொழிகளில் பாடல் பாடியுள்ளார். அவர், இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா என்று ஏ.ஆர். ரகுமான் வரையிலான பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
சமீபத்தில், இவருக்கு மத்திய அரசு சார்பில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாடகி வாணி ஜெயராமன், சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அவரது இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு தொடங்க உள்ளது.
மேலும், அவர் உடலுக்கு சுமார் முப்பது குண்டுகள் முழங்கி காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.