சிரியா நிலநடுக்கம்.. அமளியைப் பயன்படுத்தி 20 தீவிரவாதிகள் சிறையிலிருந்து ஓட்டம்

அஸாஸ், சிரியா: சிரியாவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அமளியைப் பயன்படுத்தி அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனர்.

வட மேற்கு சிரியாவில் உள்ள அஸாஸ் சிறையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 தீவிரவாதிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பரபரப்பைப் பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டனர்.

ரஜோ என்ற இடத்தில் இந்த சிறை உள்ளது. இது துருக்கி எல்லைப் பகுதியில் இருக்கிறது. மொத்தம் 2000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 1500 பேர் தீவிரவாத புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். குர்திஷ் படையினரும் இதில் அடக்கம்.

ரஜோ நகரிலும் நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. அதைப் பயன்படுத்தித்தான் இந்த தீவிரவாதிகள் தப்பி ஓடியுள்ளனர். இருப்பினும் மற்ற கைதிகள் பாதுகாப்புடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பி ஓடியவர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

துருக்கி, சிரியா ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் இரு நாடுகளின் எல்லைப் பகுதியிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.