நாமக்கல் மற்றும் பரமத்தி ஒன்றியங்களுக்கு உட்பட பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு பொருட்கள் லாரி மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டிற்கான டெண்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. அதன்படி 2023 -2024 ஆண்டிற்கான டெண்டர் நடைபெறுவதாக கடந்த மாதம் 20-ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதில் இன்று டெண்டர் நடைபெறுவதாகவும் அது நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு துவங்கி இன்று காலை 10.30 மணியளவில் டெண்டரில் பங்கேற்கலாம் எனவும் அதன்பின் குறைந்த ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்றுகாலை 10.30 மணி வரை டெண்டர் விண்ணப்பத்தை போட பெட்டி வைக்கப்படாமல் இருந்தது குறித்து அதிகாரிகளிடம் டெண்டர் போட வந்தவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு நாமக்கல், பரமத்தி பகுதிகளுக்கு தனித்தனியாக பெட்டிகள் தயார் செய்து கொண்டிருப்பதாக கூறிய அதிகாரிகள் சிறிது நேரத்தில் டெண்டருக்கான பெட்டியை வைத்தனர்.
அப்போது பெட்டியில் நாமக்கல் பகுதிக்கான விண்ணப்பத்தை போடலாம் என காத்திருந்த சிலர் அலுவலகத்தில் இருந்த நாமக்கல் பகுதிக்கான பெட்டியில் தங்களது விண்ணப்பத்தை போட்டு விட்டு அதில் வேறு யாரையும் போட விடாமல் டெண்டர் பெட்டியை தூக்கி கொண்டு சங்க அலுவலகத்தை விட்டு அவசர அவசரமாக வெளியே சென்று விட்டனர். இதனால் மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மர்ம நபர்கள் பெட்டியை தூக்கி சென்ற போது அங்கிருந்த அதிகாரிகள் அவர்களை தடுக்கவில்லை எனவும், டெண்டரில் பங்கேற்க ஒரு சிலரை மட்டுமே அனுமதித்தாகவும் அங்கிருந்த சிலர் குற்றம் சாட்டி தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்த நாமக்கல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கேட்ட போது டெண்டர் பெட்டியை தூக்கி சென்றவர்கள் யாரேன்று தெரியாது எனவும், அதனால் டெண்டர் எடுப்பது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் டெண்டருக்கான பெட்டியை தூக்கி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடமும் நாமக்கல் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர்.