விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் அருகே வீடூர் அணை உள்ளது. இந்த அணையின் கரைப் பகுதியை தூர்வாரி கரையை பலப்படுத்தப்படுத்துவதற்கு, தடுப்பு சுவர் கட்டுதல், பூங்கா அமைத்தல், இளைப்பாறும் குடில்கள் என்று மொத்தம் 43 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, இந்த அணையின் கரைப்பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் அளவிற்கு தார்சாலைகள் அமைக்கும் பணி கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதியதாக தார்சாலை அமைப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள், பழைய தார்சாலை மீது கவனம் குறைவாகவும், தரமற்ற சாலை அமைப்பதாகவும் கூறி ஆத்தி குப்பம் பகுதி மக்கள் சாலை அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளனர். மேலும், போடப்பட்ட தார்சாலையை கைகளால் பெயர்த்து எடுத்து தரமற்ற சாலை அமைப்பதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த அணையின் பொறியாளர் மற்றும் பணி ஒப்பந்ததாரர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அப்பகுதியில் தரமான முறையில் சாலை அமைப்பதாக உறுதி அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.