விபூதியை உடலில் எங்கெல்லாம் பூசி கொள்ளலாம்? அதன் மகத்துவம் என்ன?

பாரத கலாச்சாரத்தில், விபூதி என்பது ஒரு மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு உதவும் ஆழமான கருவியாக பார்க்கப்படுகிறது. திருநீறு என்று அழைக்கப்படும் விபூதியை சரியான முறையில் தயாரித்து உடலில் குறிப்பிட்ட இடங்களில் பூசி கொள்வதன் மூலம்  பல நன்மைகளை பெற முடியும்.

நம் மரபில் திருநீற்றின் பெருமையை பல ஆன்மீக பெரியோர் பாடியும் போற்றியும் வந்துள்ளனர். அதன்படியே திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய இரண்டாம் திருமுறை திருநீற்றுப் பதிகம் மிகவும் பிரசித்தி பெற்றது. பாண்டிய மன்னனான கூன் பாண்டியனின் வெப்ப நோயை தீர்க்க திருநீற்றுப் பதிகம் பாடி, திருநீற்றை பூசி மன்னனை நோயில் இருந்து மீட்டார் சம்பந்தர் பெருமான். அப்போது அவர் பாடிய பாடல்களே திருநீற்றுப் பதிகத்தில் இடம்பெற்றுள்ளன. “மந்திரமாவது நீறு” என தொடங்கும் பதிகம் இன்றளவும் போற்றப்படும் பதிகமாக விளங்குகிறது. 

“மந்திரத்திற்கு ஒப்பானது திருநீறு. வானுலகில் இருப்பவர்கள் பூசிக்கொள்வது திருநீறு. அழகு தருவது, வணங்குதலுக்குரியது, ஞானம் நல்கும் நூலில் இருப்பது, வேதங்களில் போற்றப்பட்டது, கொடிய நோய்களை, வினைகளை போக்குவது” என திருநீற்றின் பெருமையை சம்பந்தர் பெருமான் வரிக்கு வரி போற்றி பாடியுள்ளார். 

அப்படிப்பட்ட பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய விபூதி ஒரு மனிதனுக்கு எவ்வகையில் உதவுகிறது என்பதை சத்குரு சொல்கிற போது, “விபூதியை பயன்படுத்துவத்துவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக சக்தியை வழங்குவதற்கு ஏதுவான சாதனமாக விபூதி திகழ்கிறது. மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை அது தொடர்ந்து நினைவுப்படுத்தி கொண்டேயிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மரணம் நிகழலாம். அப்போது மிஞ்சுவது இந்த சாம்பல் மட்டுமே என்பதை தொடர்ந்து நினைவில் இருக்க செய்கிறது” என்கிறார்

மேலும் அவர் கூறுகையில் “யோகிகள் எப்போதும் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைத் தான் பயன்படுத்துவார்கள். அப்படிப் பயன்படுத்த முடியாது என்றால், அதற்கு ஒரு மாற்றாக பசுவின் சாணத்தை உபயோகிக்கலாம். அத்துடன் வேறு சில வற்றையும் கலந்து தான் விபூதி செய்வோம் என்றாலும், அடிப்படைப் பொருள் பசுவின் சாணம் தான். இந்த சாம்பலையும் உபயோகிக்க முடியவில்லை என்றால், அடுத்ததாக அரிசியின் உமியைக் கொண்டு தயாரித்த விபூதியை பயன்படுத்தலாம். இது, உடல் என்பது பிரதானம் அல்ல, அது வெறும் உமி என்பதை குறிக்கும்.” என்கிறார். 

இந்த விபூதியை கட்டைவிரல் மற்றும் மோதிர விரலை பயன்படுத்தி மிக சிறிய அளவில் எடுத்து புருவ மத்தியில் அதாவது ஆக்ஞா சக்கரத்தின் மீது பூசி கொள்ளலாம். அடுத்து, தொண்டை குழியின் மீது அதாவது விசுத்தி சக்கரத்தின் மீது பூசி கொள்ளலாம், மார்புக்கு மத்தியில் அதாவது அனாகத சக்கரத்தின் மீதும் பூசி கொள்ளலாம். 

விபூதி என்பது கடவுள் நம்பிக்கை சார்ந்ததோ அல்லது மதம் சார்ந்ததோ அல்ல. இது ஒருவரின் உள்நிலை வளர்ச்சிக்கு உதவும் கருவி. இந்த கருவியை சரியான வகையில் பயன்படுத்தினால் ஆன்மீகத்தை இன்னும் ஆழமாக உணரமுடியும். 

ஆன்மீகத்தை தீவிரமாக உணர சிவாங்கா சாதகர்கள் திருநீறு அணிந்து விரதங்களை அனுசரித்து சிவாங்கா சாதனா மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் மகாசிவராத்திரியை முன்னிட்டு கடந்த மாதம் ஈஷா யோக மையத்திலிருந்து புறப்பட்ட ரதங்களோடு தமிழகமெங்கும் வலம் வந்த வண்ணம் உள்ளனர். இந்த ரதங்களானது ஆதியோகியின் திருவுருவத்தை சுமந்தபடி, தமிழகத்தின் பல திசைகளில், பல்லாயிரக்கணக்கான தூரத்தை தாண்டி உலா வருகிறது. வரும் மகாசிவராத்திரியான பிப்ரவரி 17-ம் தேதி ஈஷா யோக மையத்தை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.