இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி – தனுஷ்

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி நடிக்கும் படம் 'வாத்தி'. இப்படம் தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும் வெளியாகிறது. தனுஷ் நடித்துள்ள முதல் நேரடித் தெலுங்குப் படம் இது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கி அட்லூரி, தனுஷ், சம்யுக்தா, தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தனுஷ் ஒரு சில வார்த்தைகள் தெலுங்கில் பேசி பின்னர் தமிழில் தொடர்ந்தார். ரசிகர்கள் புரியவில்லை என்று கேட்டுக் கொண்டதும் அடுத்து ஆங்கிலத்தில் பேசினார்.

“இது என்னோட முதல் நேரடி தெலுங்குப் படம். இப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. என்னோட அன்பான படக்குழுவோட உங்களை சந்திக்கிறதும் மகிழ்ச்சி. முன்னாடி வந்து தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, கன்னட சினிமா, மலையாள சினிமா, ஹிந்தி சினிமான்னு இருந்தது. இப்ப எல்லாரும் எல்லா சினிமாவும் பார்க்கறோம். ஒரு இந்தியத் திரையுலகமா ஆகிடுச்சி. அது ரொம்ப அற்புமானது.

இப்ப நீங்க எல்லாரும் தமிழ்ப் படம் பார்க்கறீங்க, நாங்க எல்லாரும் தெலுங்குப் படம் பார்க்கறோம், ரொம்ப அழகா இருக்கு இந்த மாற்றம். இப்ப உங்க முன்னாடி நான் நடிச்ச தெலுங்குப் படத்தை புரமோட் பண்றதுக்காக நின்னுட்டிருக்கேன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு பார்டர்ல இருக்கிற ஒரு கிராமத்துல நடக்கற மாதிரியான ஒரு கதை. இரண்டு கலாச்சாரமும் கலந்து இருந்தது, இரண்டு மொழிகளும் கலந்து இருந்தது. அதைப் பார்க்கும் போது அவ்ளோ அழகா இருந்தது. எவ்ளோ பக்கத்துல பக்கத்துல நாம இருக்கோம்னு புரிஞ்சுது. அந்த மாதிரி ஒரு கதை அமைஞ்சதுக்கு ரொம்ப சந்தோஷப்படறேன்.

இந்தப் படத்தைக் கொடுத்ததுக்கு இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு நன்றி சொல்லிக்கிறேன். மொத்த படக்குழுவுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி,” என்றார்.

அப்போது ரசிகர்கள் 'விஐபி' பட வசனத்தைப் பேசுமாறு கூச்சலிட்டனர். அவர்களின் விருப்பத்தை ஏற்று அந்த வசனத்தைத் தமிழில் பேசிக் காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.