ராஜபாளையம் | குவாரியில் கற்கள் சரிந்து 50 அடி பள்ளத்தில் விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல் குவாரியில் பணியாற்றும்போது கற்கள் சரிந்து விழுந்ததில் 50 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில், படுகாயமடைந்த இருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் நானகு கல் குவாரிகள் இயங்கி வருகிறன்றன. இங்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த கந்த கிருஷ்ணகுமார்(50) என்பவர் ஜெய விநாயகா புளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் கல் குவாரி நடத்தி வருகிறார். இந்தக் குவாரியில் கல் உடைப்பதற்காக நேற்று முன்தினம் பாறை உச்சியில் வெடி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இளந்திரைகொண்டான் பகுதியைச் சேர்ந்த மாரிக்கனி (50), தென்காசி மாவட்டம் வலசை பகுதியைச் சேர்ந்த முத்துமாணிக்கம்(45), சாமிராஜா(40) ஆகிய 3 பேரும் பாறை உச்சியில் நின்று உடைந்த கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கற்கள் சரிந்ததில் தொழிலாளர்கள் மூன்று சுமார் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்தனர்.

இந்த விபத்தில் மாரிக்கனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முத்துமாணிக்கம், சாமிராஜா ஆகிய இருவரும் சிவகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்த மாரிக்கனி உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து சேத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.