Maha Shivarathri: தமிழகத்தில் களைகட்டும் சிவராத்திரி கொண்டாட்டங்கள்! அரசு சார்பில் கோலாகலம்

Maha Shivarathri 2023: எதிர்வரும் சிவராத்திரி தினத்தில் நெல்லை நெல்லையப்பர் , மயிலை கபாலீஸ்வரர் கோவில்கள் உள்பட தமிழக முழுவதும் 5 பிரசித்தி பெற்ற கோவில்களில் அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி விழா பிரம்மாண்டமான முறையில் கொண்டாட  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தொன்மையான கோவில்களின் வரலாறுகள்புதுப்பிக்கப்பட்ட 108 கோவில் புத்தகங்கள் 13 போற்றிப் புத்தகங்கள் ஆகியவை இடம்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்படுகிறது என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் . நெல்லை வந்த  அமைச்சர் சேகர்பாபு சிவராத்திரி விழாவை மிக சிறப்பாக நடத்துவதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் விழா நடத்துவதற்காக பாளையங்கோட்டை எருமைக்கடா மைதானம், திம்மராஜபுரம் பெருமாள்கோவில் பகுதியில் உள்ள இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில்  மயிலை கபாலீஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், நெல்லை நெல்லையப்பர் கோவில் உட்பட மாநிலத்தில் உள்ள ஐந்து பிரசித்தி பெற்ற கோவில்களில் சிவராத்திரி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிவராத்திரியை கொண்டாடும் வகையில் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஆன்மீக பட்டிமன்றங்கள் ஆன்மீகம் சார்ந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. நெல்லை பாளையங்கோட்டை  ஆயிரத்து அம்மன் கோவில் எருமை கடா மைதானத்தில் வைத்து சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

நெல்லையில் நடைபெறும் சிவராத்திரி விழாவின் போது தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களை சேர்ந்த அரங்குகள் அமைக்கவும் கோவில்களில் உள்ள பிரசாதங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நெல்லையில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் தொன்மையான கோவில்களின் வரலாறுகள் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் புதுப்பிக்கப்பட்ட 108 கோவிலின் புத்தகங்கள் 13 போற்றிப் புத்தகங்கள் ஆகியவை இடம்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்படுகிறது.

தென் மாவட்டங்களில் உள்ள தொன்மையான கோவில்களில் இருக்கும் இசை கருவிகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் சிவராத்திரி விழாவில் தேவையான அடிப்படை வசதிகள் சுகாதார வசதிகள் உள்ளிட்டவைகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் , முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலாசத்தியானந்த், அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 18-ந் தேதி வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார். ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.