எடப்பாடியின் தேர்தல் பிளான்: களத்தில் இறங்கிய வலது கை – இது செம ஸ்கெட்ச்!

உச்ச நீதிமன்றம் சென்று இரட்டை இலையை தனது அணிக்கு வாங்கியதே எடப்பாடியின் வெற்றி தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறும் நிலையில் தேர்தல் வெற்றி கட்டாயம் வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார். களத்தில் எடப்பாடி பழனிசாமி வகுக்கும் திட்டங்கள் குறித்து விசாரிக்கையில் இதன் பின்னால் உள்ள டீமின் தகவல்கள் தெரிய வருகின்றன.

செங்கோட்டையனுக்கு கௌரவ பதவிதான்!தேர்தல் பணிக்குழு தலைவராக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த அரசியல்வாதி, எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் முக்கிய பதவிகளை அலங்கரித்தவர் என்பதால் செங்கோட்டையனுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டாலும் எடப்பாடி பழனிசாமி தனது நம்பிக்கைக்குரிய தளபதியான சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் கூட்டுறவு இளங்கோவனை தேர்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
களமிறங்கிய எடப்பாடியின் தளபதி!முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் ஈரோட்டில் பிரச்சாரத்தை முன்னெடுத்தாலும் கூட்டுறவு இளங்கோவன், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் தலைமையில் ஒரு டீம் அமைக்கப்பட்டு அவர்கள் மூலம் பிரச்சார வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. என்னென்ன வியூகங்கள் என விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் வெளியாகின்றன.
ஆளுக்கு 4 பேர் டார்கெட்!ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு பூத்துக்கும் அதிமுக சார்பில் 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 50 பேரும் ஆளுக்கு 4 அதிமுகவினர் அல்லாதவரின் வாக்குகளை கொண்டுவர வேண்டும் என டார்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பூத்துக்கு 200 வாக்குகளை உறுதிப்படுத்த வேண்டும். 238 பூத்களில் தலா 200 வாக்குகள் என்றால் 47,600 வாக்குகள் அதிலே உறுதியாகிவிடும். மேம்போக்காக இல்லாமல் கீழே இறங்கி தனி நபர்களை தனிப்பட்ட முறையில் கேன்வாஸ் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கூட்டுறவு இளங்கோவன் தலைமையிலான டீம் இதை கண்காணிக்கிறது
திண்ணைப் பிரச்சாரம்!வாக்கு சேகரிக்க செல்லும் போது டீக் கடைக்கு சென்று டீ ஆத்துவது, புரோட்டா போடுவது போன்ற செயல்கள் மீடியாவின் கவனத்தை ஈர்க்க உதவி செய்யும். ஆனால் வாக்குகளாக அவை மாறும் என கூறமுடியாது. எனவே திண்ணைப் பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். அது பற்றி விசாரித்தோம் தெருவின் முக்கிய சந்திப்புகள், திண்ணைகளில் உட்கார்ந்து அங்குள்ள வீடுகளில் தண்ணீர் வாங்கி குடித்துக் கொண்டு நாங்கள் உங்கள் பக்கம் தான் என்ற அன்னியோன்யத்தை ஏற்படுத்த வேண்டும்.
நாங்கள் உங்கள் பக்கம்!அரசியல்வாதிகளுக்கே உரிய பிரச்சார பாணியில் அல்லாமல் இயல்பான பேச்சுமொழியில், திமுக அரசு கொண்டு வந்த சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு குறித்து பேச வேண்டும். மின் கட்டண உயர்வால் விசைத் தறி தொழில்கள் பாதிக்கப்படுவது, ஊராட்சி கோட்டை நீர் திட்டத்தை முறையாக செயல்படுத்தாதது, என மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பேசி திமுகவுக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் வாக்காளர்களின் மனங்களை மாற்றும் வேலைகளில் இறங்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
வெற்றி லட்சியம் இழுபறி நிச்சயம்!எடப்பாடி பழனிசாமி டீமின் இந்த திட்டங்கள் ஓரளவு கைகொடுத்தால் கூட அதிமுக அல்லாத வாக்காளர்களை கணிசமாக பெறலாம். அத்துடன் இரட்டை இலை சின்னம், அறிமுகமான வேட்பாளர், கடைசி நேர கவனிப்புகள் ஆகியவை மூலம் திமுகவுக்கு டஃப் பைட் கொடுக்கலாம் என்று கூறுகிறார்கள். ஒருவேளை வெற்றி சாத்தியமாகாவிட்டால் கூட தோல்வி பயத்தை லேசாக அவர்களுக்கு காட்ட வேண்டும் என்று களத்தில் உள்ள அதிமுகவினருக்கு உற்சாகம் ஊட்டப்படுகிறதாம். ‘வெற்றி லட்சியம் இழுபறி நிச்சயம்’ என்ற கணக்கோடு களமாடி வருகின்றனர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.