ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்து 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணியில் ரோகித் சர்மா 120 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஜடேஜா, அக்சர் படேல் அரை சதமடித்து ஆடி வருகின்றனர். ரோகித் சர்மா சதமடித்ததும் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அரைசதத்தை சதமாக மாற்றும் வீரர்கள் பட்டியல் காட்டப்பட்டது.
அதில் 50 சதவீதத்தோடு ரோகித் சர்மா நான்காம் இடம் பெற்றிருந்தார். ஆனால், 60 சதவீதத்தோடு முதல் இடத்தில் தமிழக வீரர் முரளி விஜய் இருந்தார். அதனைக் கண்டதும் வர்ணனையாளர், முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆச்சரியம் என கூறினார்.
அவரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, சில முன்னாள் மும்பை வீரர்களால் தென்னிந்திய வீரர்களை என்றுமே புகழ்ந்து பேச முடியாது என்று முரளி விஜய் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக வீரரான முரளி விஜய் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in