தேசிய பங்குச் சந்தையின் பச்சைக்கொடி! அதானி குழும பங்குகள் இனிவரும் நாட்களில் உயர வாய்ப்பு

கூடுதல் கண்காணிப்பில் இருந்த 3 அதானி நிறுவனங்களை, தேசிய பங்குச் சந்தை நீக்கியுள்ளது. இதனால் வரும் நாட்களில் பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஷோன் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றை கூடுதல் கண்காணிப்பு கட்டமைப்பிலிருந்து (ASM) தேசிய பங்குச் சந்தை நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை முதல் (பிப்ரவரி 13) முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நிறுவனங்களை கூடுதல் கண்காணிப்பிலிருந்து தேசியப் பங்குச் சந்தை அகற்றியிருப்பதால், வரும் நாட்களில் அதானி குழுமப் பங்குகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
image
இந்த மாத தொடக்கத்தில், அதானி குழுமத்துக்குச் சொந்தமான அதானி எண்டா்பிரைசஸ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம், அம்புஜா சிமென்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் கண்காணிப்பில் உள்ளதாக தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை தெரிவித்திருந்தன.
கூடுதல் கண்காணிப்பு என்பது செபியின் ஒரு பகுதியாகும். இது சந்தை ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கும் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குமான பரிவர்த்தனைகளின் முயற்சியாகும். அதாவது, அதானி குழுமப் பங்குகளின் அதிக ஏற்ற இறக்கத்தைத் தடுக்க கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளின்கீழ் வைத்திருந்தது. இந்த நடவடிக்கை சந்தை கண்காணிப்பு தொடா்புடையதே தவிர, நிறுவனத்துக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை இல்லை எனவும் பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
பொதுவாக இத்தகைய குறுகிய காலக் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் இருக்கும் பங்குகளில் வர்த்தகம் செய்ய முதலீட்டாளர்கள் இன்ட்ராடே டிரேடிங்கிற்குக்கூட 100% முன்பணம் செலுத்த வேண்டும் எனப் பிரச்சனை உள்ளது.
image
முன்னதாக, ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்த நிலையில், பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி செயலற்றுவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், ”தற்போது பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களைப் பாதுகாக்க ஒழுங்குமுறை ஆணையத்தின் நடைமுறைகளில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து நிதி அமைச்சகத்தையும் ஆலோசித்து பதில் அளிக்க வேண்டும்” என செபி அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது. அதானி பற்றிய முழுச் செய்திகளையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். 
– ஜெ.பிரகாஷ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.