கேரளாவில், மாணவிகளை பாலியல் கொடுமை செய்த வழக்கில், மதரசா ஆசிரியருக்கு 169 வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 6.4 லட்சம் அபராதம் விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் அருகே ஆலுவாவை சேர்ந்தவர் யூசுப், வயது72. இவர், கோட்டயம் மாவட்டம், கடுத்துருத்தியில் மதரசா பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டில், மதரசாவுக்கு வந்த மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, அவர்களை பாலியல் கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தலையோலப்பறம்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதரசா ஆசிரியர் யூசுப் மாணவிகளை பாலியல் கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, யூசுப் மீது போக்சோவில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடுத்துருத்தி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று முன்தினம் 5 வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அனைத்து வழக்குகளையும் சேர்த்து மதரசா ஆசிரியர் யூசுப்புக்கு மொத்தம் 169 வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனையை அறிவித்த நீதிமன்றம், அவருக்கு ரூ.6.4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 11 வழக்குகளில் 6 வழக்குகளில் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.