மதுரை: ‘கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் உலகத்தரம் வாய்ந்ததாக கட்டப்பட்டு வருகிறது. கட்டிடத்திற்கு ரூ.99 கோடியும், புத்தகம் வாங்குவதற்கு ரூ.10 கோடியும், தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. கீழ்தளம், தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடியில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, ஜன. 11ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். உலகத்தரம் வாய்ந்த இந்த நூலகத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர துரிதமாக பணிகள் நடந்து வருகிறது. கீழ்தளத்தில் வாகனங்கள் நிறுத்தவும், தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி அமர்ந்து படிக்கும் வகையில் தேவையான புத்தகங்கள், இருக்கைகளும், 250 இருக்கைகள் வசதியுடன் கூடிய கலையரங்கமும் அமைக்கப்படுகிறது. முதல் தளத்தில், குழந்தைகள் நூலகம், வாசகர்கள் தினசரி, வார, மாத பத்திரிகைகளை வாசிப்பதற்கான வசதிகளும், 2வது தளத்தில் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் தனிப்பிரிவாக இடம் பெறுகிறது.
இத்துடன் கலைஞர் ஆய்வகமும் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வரங்கில் அவரின் 4 ஆயிரம் ஆய்வறிக்கை புத்தகங்கள் இடம்பெறுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்காக 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படவுள்ளன. 3வது தளத்தில் 63 ஆயிரம் புத்தகங்களுடன் தமிழ், இலக்கியப்பகுதி தளமாகவும், 4வது தளத்தில் ஆங்கில நூல்கள் பகுதியாகவும், 5வது தளத்தில் ஐம்பெரும் காப்பியங்கள், பதினெண்கீழ் கணக்கு உள்ளிட்ட அரிய வகை புத்தகங்களின் பகுதியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. 6வது தளத்தில் திறந்தவெளி படிப்பகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
கட்டிடத்தின் முழு வடிவிலான கட்டுமான பணிகள் நூறு சதவீதம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்தது. இதனைத்தொடர்ந்து, மின் விளக்குகள், ஏசி மிஷின், 6 மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் முடிந்தன. கட்டிடத்தின் நடுப்பகுதியில் சூரியவெளிச்சம் கிடைக்கும் வகையில், கண்ணாடிப்பேழையிலான கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கார வடிவமைப்புடன், இன்டீரியர் டெகரேஷன் எனும் உள் அரங்குகள் வடிவமைப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளது. வெளிப்புற அலங்கார கட்டுமான பணிகளும் முடிந்து, ஜெர்மன் கண்ணாடிச்சுவர் பூச்சு பூசப்பட்டுள்ளது. அதில் கலைஞரின் உருவம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நூலகத்தின் முன்பகுதியில், கலைஞரின் உருவச்சிலை அமைக்கும் பணியும், மாடித்தோட்டத்துடன் நூல்களை படிப்பதற்கான வசதியும், கலைக்கூடமும் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.10 கோடி மதிப்பிலான 2.50 லட்சம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி கூறும்போது, ‘‘நூலகத்திற்கு தேவையான மேஜை, நாற்காலி, புத்தகம் வைக்கும் அலமாரிகள், படிப்பதற்கான மேஜைகள், பர்னிச்சர்கள் வாங்க ரூ.16.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இந்தப் பொருட்கள் இம்மாத கடைசியில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாங்கிய நூல்கள் அதற்குரிய இடங்களில் அடுக்கி வைக்கப்படும். தற்போதுவரை, நூலகத்தில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதி பணிகளும் விரைவாக முடிந்துவிடும். நூலகம் திறக்கும் தேதியை தமிழ்நாடு அரசு அறிவிப்பு செய்ததும், கடைசிக்கட்ட ஆயத்தப் பணிகளை முடித்து, கலைஞர் நினைவு நூலகம் அரசிடம் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.