Hybrid Rocket: மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்கள் ஹைபிரிட் ராக்கெட் மூலம் செலுத்தப்படும்

தனியார் நிறுவனங்களின் மூலம் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் வானில் செலுத்தப்பட உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 5000 மாணவர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்கள் ஹைபிரிட் ராக்கெட் மூலம் வானில் செலுத்தப்பட உள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டாக்டர் “ஏபிஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023″குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனர் ஆனந்த் மேகலிங்கம், பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட்

மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனங்களுடன் இணைந்து ஏபிஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023 செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தியா முழுவதும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 5000 மாணவர்கள் பங்கேற்று 150 சிறிய ரக செயற்கைக்கோள்களை வடிவமைத்து உருவாக்க உள்ளனர். பின்னர் இந்த செயற்கைக்கோள்கள் சவுண்ட் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023

“டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023″செங்கல்பட்டு மாவட்டம் பட்டிப்புலம் கிராமத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. திட்டத்தின் மூலம் மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் மற்றும் கணிதவியல் கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்க முடியும்.

கடல் மட்டத்திலிருந்து ஐந்து முதல் ஆறு கிலோமீட்டர் தூரம் வரை ஹைபிரிட் வகை ராக்கெட்டுகளை பயன்படுத்தி செயற்கைக்கோள்ஏவப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியா முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட 5000 மாணவர்களில் 2000 மாணவர்கள் அரசு பள்ளியை சார்ந்தவர்கள் இந்த செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் முழு புரிதலோடு மாணவர்கள் பங்காற்றியுள்ளனர்.

இந்திய வான் வழிக் கழகம் மற்றும் துறைசார் அனுமதி

காற்றின் வேகம், காற்றின் தரம், வெப்பநிலை உள்ளிட்ட தகவல்களை இவ்வகையான செயற்கைக்கோள்கள் கண்காணிக்கும் எனவும் இதன் ஆயுட்காலம் எட்டு மணி நேரமாக இருக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டது.

இந்திய வான் வழிக் கழகம் மற்றும் துறைசார் அனுமதியோடு ஹைபிரிட் வகை ராக்கெட் மூலமாக செயற்கைக்கோள் ஏவும் பணியானது பிப்ரவரி 19ஆம் தேதி பட்டிப்புலம் பகுதியில் நடைபெற உள்ளது.

வானில் செயற்கைக்கோளை நிலை நிறுத்திய பின் ஹைபிரிட் வகை ராக்கெட்டுகள் மீண்டும் கடல் பகுதியை அடையும் அதனை நம்மால் மீண்டும் பயன்படுத்த முடியும். 

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட SSLV – D2 ராக்கெட் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இனி இந்த வகை ராக்கெட்டுகள் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோமசுந்தரம் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.