மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் திருச்சி சாலை சந்திரா மகாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் 27 மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களது தலைமையிலான இந்த கூட்டத்தில் நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதல் தீர்மானமாக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து செயல்பட்டு வரும் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி நீக்கப்பட்டார்.
அவர் கட்சியின் விதிமுறைகளை மீறி ஒருதலைபட்சமாக தன்னிசையாக செயல்பட்டு வந்த காரணத்திற்காக ஆறு மாத காலத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து துருக்கியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களுக்காக வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும், வட மாநில இளைஞர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவது நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டை நோக்கி வருவது இவர்களின் வருகையை முறைப்படுத்தி கண்காணித்து வரவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே காவல்துறையினர் அந்த அரங்கிற்குள் நுழைந்தனர். திருமண மஹாலுக்குள் விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர் வைத்ததை சுட்டிக்காட்டிய அவர்கள், அதனை நீக்குமாறு அறிவுறுத்தினர். அப்போது, போலீஸாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் ஏற்பட்டதையடுத்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவரது சொந்தக் கட்சியினரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது சலசலப்பை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க | பாவங்களை போக்கும் மகாசிவராத்திரி பூஜை! செய்ய வேண்டியதும்… செய்யக் கூடாததும்!