தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த வாத்தி திரைப்படம் சில நாட்களுக்குமுன்பு திரையில் வெளியானது. தொடர் தோல்விகளில் சிக்கி தவித்த தனுஷிற்கு கடந்தாண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது. குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று நூறு கோடி வசூலித்து தனுஷிற்கு தேவையான வெற்றியை கொடுத்து வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது.
Mayilsamy: மயில்சாமி வாழ்க்கையை படமாகவே எடுக்கலாம்..மறைந்த நடிகர் விவேக் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..!
இதன் காரணமாக தனுஷ் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இப்படத்தின் மூலம் தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமானார். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தாலும் படம் சமூகத்திற்கு தேவையான கல்வியை பற்றி பேசியுள்ளதால் ரசிகர்களின் ஆதரவு இருந்தது.
இதன் காரணமாக முதல் நாளில் வசூல் சற்று குறைவாக இருந்தாலும் அடுத்த இரண்டு நாட்களில் வாத்தி படத்தின் வசூல் அடித்து நொறுக்கியது. மொத்தம் வாத்தி திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 45 கோடி வரை வசூலித்துள்ளது.
குறிப்பாக தமிழை விட தெலுங்கில் இப்படம் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன. என்னதான் படத்தில் சில குறைகள் இருந்தாலும் எடுத்துக்கொண்ட கதைக்களம், அழுத்தமான வசனங்கள் என படத்தில் பல சிறப்பம்சங்கள் இருப்பதால் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவு இப்படத்திற்கு பெருகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே வாத்தி திரைப்படம் தனுஷிற்கு ஒரு சிறந்த வெற்றிப்படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.