“திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவார்களா? அப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது திமுகவுக்கு நினைவிருக்கிறதா?” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று வீட்டு உபயோக சிலிண்டர், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.1118.50 காசுகள் வீரப்பனை செய்யப்படுகிறது.
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.350.50 உயர்ந்துள்ளது. ஆட்டோக்களுக்கான எல்பிஜி விலையும் ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு மேலும் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
ஏற்கெனவே, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து அவர்களைக் காப்பாற்றும் விதமாக திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவார்களா?
தேர்தல் அறிக்கையில் அப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது திமுகவுக்கு நினைவிருக்கிறதா?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.