பெகாசஸ் செயலி குறித்த பேச்சு: ராகுல் காந்தியின் அறிவு திறனை கண்டு பரிதாபப்படுகிறேன் – முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்

புதுடெல்லி,

கங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி பேசுகையில், ஜனநாயகத்திற்கு அவசியமான அமைப்பு கட்டமைப்புகள் கட்டுபடுத்தப்படுகின்றன. இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பான ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி என்னையும் அரசு வேவு பார்த்தது. பெகாசஸ் உளவு செயலி குறித்து உளவுத்துறை அதிகாரிகள் என்னை எச்சரித்தனர். அரசியல் கட்சித்தலைவர்கள் பலரது செல்போன்களில் பெகாசஸ் ஓட்டுக்கேட்பு மென்பொருள் உள்ளது.. என்னுடைய செல்போனிலும் பெகாசஸ் இருந்தது, போனில் கவனமாக பேசுங்கள் என எச்சரித்தனர்” என்றார்.

இந்த நிலையில், பெகாசஸ் செயலி ராகுல் காந்தியின் பேச்சுக்கு மத்தியப் பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இது தொடர்பாக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:-

பெகாசஸ் உளவு செயலி ராகுலின் தொலைபேசியில் இல்லை, அது அவரது மனதில் தான் இருக்கிறது. பெகாசஸ் காங்கிரசின் டிஎன்ஏவில் நுழைந்துள்ளது. நான் ராகுல் காந்தியின் அறிவுத் திறனைக் கண்டு பரிதாபப்படுகிறேன். அவர் வெளிநாடுகளுக்கு சென்று நமது இந்தியாவுக்கு எதிராக பேசி வருகிறார்.

வெளிநாடுகளில் இந்தியாவினை அவமதிக்கும் விதமாக காங்கிரஸ் நடந்து கொள்வது அவர்களின் புதிய திட்டம். இந்தியா குறித்து வெளிநாடுகளுக்கு சென்று விமர்சிப்பது தேசத்துக்கு எதிரானது. அதனால், இந்தியாவும், இந்திய மக்களும் ராகுல் காந்தியை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.